Thursday, June 30, 2011

கனவாய் மறையாத நினைவுகள்...


இரயில் நிலையம் என்றாலே உந்தன் ஞாபகமே

இரயில் வண்டி பயணமென்றாலும் உந்தன் ஞாபகமே
இருக்கையில் சன்னலோரம் அமர்ந்தாலும் உந்தன் ஞாபகமே
இடமில்லாமல் கதவோரம் நின்றாலும் உந்தன் ஞாபகமே...

இருசக்கர வாகனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
இருவரும் ஒன்றாக பயணித்ததும் ஞாபகமே
இயற்கையை இருவர் ரசித்ததும் ஞாபகமே
இரவில் இன்னிசை கேட்டாலும் உந்தன் ஞாபகமே...

ஆலய தரிசனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆலயத்தில் பிரகாரம் வலம்வந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆண்டவன் அருள் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆன்மாவை ஒருநிலை படுத்தினாலும் உந்தன் ஞாபகமே...

அதிகாலை என்றாலும் உந்தன் ஞாபகமே
ஐந்துமணிக்கு எழுந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆதியை கண்டாலும் உந்தன் ஞாபகமே - எந்தன்
அருகினில் நீயில்லாவிடினும் உந்தன் ஞாபகமே...

                                                                             ஞாபகங்கள் தொடரும்...

Saturday, June 25, 2011

பெளர்ணமி நிலவே!!! (1)


பெளர்ணமி நிலவே!!!
உன்னை நீயே
எனக்கு அறிமுகம்
செய்கிறாய்...
இன்று விண்ணைநோக்கு
உன்மனதில் இருக்கும்
என்னை காணலாம்
என்கிறாய்...

மொட்டைமாடியில் மதியை
இந்நாள்வரை நின்றுமட்டுமே
ரசித்திட்ட நான்...
முதல்முறையாய் வாழ்வில்
துகில்கொண்டே கண்டிட
எண்ணினேன் நான்...

வானத்து மங்கையே
உனக்கு துணையாக
நீயெனக்கு இணையாக
இருவரும் மகிழ்வோடு
கொஞ்சி மகிழ்ந்திடும்
நினைவுகளோடு நான்...

அரைநிர்வாண கோலமாய்
கைச்சட்டை இல்லாமல்
கையில் ஏடும்பேனாவும்
மனதில் கனவுகளையும்
கொண்டு காதல்புரிய
உன்னை காணவந்தேன்...

வெண்ணிலவே நீயும்
வெட்கம் கொண்டாயோ?
மேகமென்னும் சேலையின்
முந்தானையே எடுத்து
முகத்தினை மூடி
என்னைகாண மறுக்கிறாயே...

பாஞ்சாலியின் மானத்தை
காக்க சேலையை
கொடுத்தவன்...
உன்னுடைய நாணத்தை
மறைக்கவும் முகிலை
அனுப்புகிறானோ?

உனக்கு ஆடையை
வாரிதருவது அந்த
மாயகண்ணனின் லீலையோ?
என்மனத்துக்கு பிடித்த
பரந்தாமனும் இச்செயலால்
பிடிக்காமல் போகிறான்...

Thursday, June 23, 2011

நான்... கண்களா? இமையா?


தோழியே!
உலகத்தை நீபார்க்க
உண்மையான நட்பாய்
உனக்கு ஆயிரம்
கண்கள் இருக்கலாம்...
அதில் நானுனக்கு
வலதுகண்ணோ? இடதுகண்ணோ?
தெரியாது? ஒருவேளை
எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும்
இமையாகவே எந்நாளும்
இருக்க ஆசைப்படுகிறேன்...

Tuesday, June 21, 2011

என்னோடு நீ...



வான்மதியே!!!

என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...

நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி
என்னைநீயே மாற்றுகின்றாய்...

நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...

வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

Friday, June 17, 2011

அப்படியென்ன பிடிக்காது...?

எனக்கு பிடிக்காதது
உனக்கு பிடித்திருக்கிறது...
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்திருக்கிறது...
இருந்தாலும் நமக்குள்
ஒருவரை ஒருவர்
மிகவும் பிடித்திருக்கிறது..
அப்படியென்ன பிடிக்காதது...?
என்னை எனக்கு
பிடிக்கவில்லை...
உன்னை உனக்கு
பிடிக்கவில்லை...

Thursday, June 16, 2011

கிரகணம்.............



நிலாவாய் உனக்கு நானிருக்க
கதிரவனாய் எனக்கு நீயிருக்க
பூமியும் நம்மிடையே பூவாய்பூத்து
நெடுநேரம் நம்மைபிரிக்க எப்படிஇயலும்?

நம்மிருவருக்கு மட்டும் கிரகணம்
நமக்குநாமே பிடித்த கிரகம்
உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

வஞ்சமின்றி நஞ்சை உமிழும்
அரவமென்னை கொஞ்ச கொஞ்சமாய்
வாயில் கவ்விபிடித்தாலும் உன்னால்
உயிர்பெறும் நான்எப்படி மறைவேன்?

Wednesday, June 15, 2011

மனம் மாறிய வேளை...

என்கனவில் அவள் வந்தாள்
என்னருகில் மெல்ல அமர்ந்தாள்
என்னையே உனக்கு தந்துவிட்டேன்
உன்முன்னே நானடிமையென நின்றேன்...

என்னைபார்த்து என்னிடம் கேட்டாள்
என்னை என்னவெல்லாம் செய்யபோகிறாயென்று?
உன்னை என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று
சொல்லென்றேன் ஒவ்வொன்றாய் என்காதில்...

நாணலாய் வெட்கத்தில் தலைகுனிந்தாள்
பெண்ணினம் சொல்லிடமறுக்கும் பதில்தான்
ஆணினம் செய்திடநினைக்கும் செயல்தான்
என்றென மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்...

நீநினைக்கும் எந்தவொரு ஆசையையும்
நிறைவேற்றிட என்மனம் துடிப்பதையும்
இரட்டிப்பாய் செய்வித்து உன்னை
வீழ்த்திட நினைப்பதையும் அறிந்திடுஎன்றேன்...

என்விரல் பிடித்து 
என்கேசம் கோதி
அவளிதழ் அசைய
தென்றல் காற்றாய்
எண்ணங்களை ராகமாக்கி
இசையாய் ஒலித்தாள்...

பட்டியல் முற்றுபெறும்
முன்னே என்னிதயத்தை
காகிதமாக்கிய வரிகளை
அவள்கையில் திணித்தேன்...

எந்தன் காகித்ததை பார்த்தாள்
எந்தன் கண்களை பார்த்தாள்
காதலை வார்த்தையில் சொல்லாமல்
அவளது பார்வையில் வைத்தாள்...

புணர்தல் இல்லாத காமம்
காமம் இல்லாத காதல்
காதல் இல்லாத அன்பு - இவையாவும்
ஒன்றென என்னையள்ளி அரவணைத்தாள்...

அவள்காட்டிய அன்பிற்கு 
பரிசாய் முத்தமளித்தேன்
நான்காட்டிய காதலிற்கு
என்னை கட்டியணைத்தாள்

இதழோடு இதழ்மெல்ல சேர்த்தேன்...
முத்ததிற்குபின் கண்விழித்து பார்த்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது எல்லாம்
இன்பமான கனவென்று இதயத்திற்கு..

Saturday, June 11, 2011

மலர் பேசும் வார்த்தைகள்...


அழகிற்காக என்னை
இறைவனும் பெண்களும்
சூடிமகிழ்ந்தாலும் எந்தன்
வாசனையில் மட்டும்தான்
பெருமை தெரிகிறது...
அழகாய் பிறந்தநாங்கள்
அத்தனை பேரும்
இறைவனையும் சேருவதில்லை
பெண்களும் சூடுவதில்லை...
உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...

Friday, June 10, 2011



 
யானையே!!!

நேற்றுவரை...
மைசூர் என்றால்
தசரா ஞாபகம்
தசரா என்றால்
உந்தன் ஞாபகம்

நீ என்றால்
உன்னழகு ஞாபாகம்
உன்னழகு என்றால்
காட்சிகள்பல ஞாபகம்

இன்றும்...
உந்தன் ஞாபகம்...
ஆனால் கொள்ளையடித்த
உன்னழகு கொலைசெய்ய
துவங்கியது ஏனோ?

காட்டை நாங்கள்
ஆக்கிரமிக்க தொடங்கியதால்
காட்டைகாக்கும் பொருட்டு
ஒருநாள் அடையாள
போராட்ட சின்னமாய்
நாட்டிற்குள் புகுந்தீரோ?

காட்டிற்குள் மரத்தை
முறிக்கும் நீங்கள்...
நாட்டிற்குள் வாகனத்தை
உடைத்தது ஏனோ?
செல்லும் பாதையில்
தடையாக இருந்ததாலோ? - எங்களும்
ரெளடிதனம் பண்ணதெரியும்
என்பதை காட்டவோ?

பணப்பெட்டி இயந்திரத்துக்கு
காவலன் அவன்...
உங்கள் தேவையது இல்லாதபோது
அவனை கொன்றதுஏனோ?
மனிதர்கள் நாங்கள்
பலபேர் மிருகமாகிறோம் - மிருகம்
நீங்கள் மனிதர்கள்போல்
மாறியதும் ஏனோ?
 

வாய்பேசும் மனிதனையும்
வாய்பேசா உன்னைபோன்ற
கால்நடையும் குத்தி
கொல்ல காரணமெதுவோ?

நண்பர் ஹாசிம் அவர்களுக்கு....


ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

Wednesday, June 8, 2011

மழையின் முத்தம்...



இன்றைய பொழுதின்
முடிவோ?
இல்லை...
நாளைய பொழுதின்
தொடக்கமோ?
கேள்விக்கு விடைத்தெரியாத
நேரம்!
பயணமும் வாழ்க்கையும்
நள்ளிரவில்...

என்னை நனைப்பது
உந்தன் மொழியின்
வார்த்தைகளா?
இல்லை....
பெய்யும் மழையின்
பொழியும் சாரலின்
துளிகளா?
ஈரமும் கதகதப்பும்
என்னோடு...

கார்மேகம் தூவிடும்
பூவிதழ்களாய் தூறல்
என்மேனியை கொஞ்சம்
கொஞ்சமாய் தீண்டிட...
தேன்சொட்டாய் ஒவ்வொரு
துளியும் உன்னைபோல்
என்னையும் மண்ணையும்
ஆக்கிரமிக்க தொடங்கிட...

எங்கிருந்தோ குறிவைத்து
எய்யபட்ட அம்பாய்
எங்கிருந்தோ பிறந்து
என்னுதட்டில் விழுந்து
என்னை அதுவும்
ஏகாந்தத்தில் வீழ்த்தியது
எனக்கு நீயளிக்கும்
முத்தத்தினை போல....

Wednesday, June 1, 2011

மஞ்சத்தின் மீது
பஞ்சணையாய் நினைத்து
நெஞ்சத்தில் உறங்கும்போது
எந்தன் வலப்பகத்தில் - நித்தம்
தலைசாய்த்து துகில்கொள்...

ஏனெனில்!
உயிராக என்னிதயத்தில்
உள்ளேவாழும் நீயாகிய
உனக்கு மெல்ல
உந்தன் சிரமோ?
உந்தன் கரமோ? -
உரசினாலும்கூட வலிக்ககூடும்...


இல்லையேல்...
இடப்பகத்தில் ஒலிக்கும்
இதயதுடிப்பின் ஓசையாகிய
உன்பெயரே மெல்ல
உன்தூக்கத்தை கெடுக்ககூடும்...