Wednesday, December 1, 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு...


ஈழம் மண்ணில் இன்னும்
ஈரம் குன்றாமல் இன்றும்
காரணமறிவோரோ?
எத்தனையோ ஆனால் எதுவோ?

அறிவியலின் விந்தையல்ல
அழிவின் விளைவாய்…
ஆக்கத்தின் வித்தாய்
ஆரம்பத்தின் முளையாய்…

நாற்புறமும் நீரால் சூழ்ந்து
தீவாய் மிதக்கும் பூமியிது
என்பதனாலோ? - உண்மையாய்
இருக்கலாம் ஆனால் இல்லை…

எல்லா உறவுகளை இழந்து தவிக்கும்
எங்கள் நட்புகளின் கண்ணில் வழியும்
கண்ணீரோ? - இருந்தாலும்
இருக்கலாம் ஆனால் இல்லை…

எங்களுக்காக உயிரையும் கொடுத்து பிரிந்த
எங்கள் உறவுகளின் உடலில் பிறந்த
செந்நீரோ? - உருத்தலாய்
இருக்கலாம் ஆனால் உண்மை…

எந்தன் இனத்தவர் விட்டுசென்ற
காலடிகளின் தடமும் அழியாமல்
மனதிற்குள்ளும் அதற்கு அடையாளமாய்
கண்களின் முன்பும் நிழலாடிக்கொண்டு…

மண்ணில் புதைந்து போனவர்கள்
எத்தனையோ பேர் கண்ணில் தெரியாது
மண்ணை பிரிந்து போனவர்களும்
எத்தனையோ பேர் கணக்கில் வராது…

குண்டு துளைக்க முடியாத சட்டையிருக்கலாம்
குண்டுகள் துளைக்காமல் விட்டதில்லை எங்கள்வீட்டை
கண்களுக்கு முன்பு எத்தனையோ கொடூரம் - எனினும்
கணத்த இதயத்துடன் வாழ்ந்து(ம்) வருகின்றோம்…

விட்டுகொடுப்பவன் வாழ்வில்
என்றும் கெட்டு போவதில்லை
விட்டுபிரிந்தவர்கள் மீண்டும்
சேராமல் இருக்க போவதில்லை
இழந்த உயிர்கள்
வாழ்வில் மீண்டு(ம்) வரபோவதில்லை
இருக்கின்ற உயிர்கள்
துவண்டு போகாமலிருந்தால் போதும்

உறவுகள் இல்லாமல் நாங்கள்
வாழும் இவ்வாழ்கை துறவுகோலம்தான்
நாங்கள் வேண்டுவது திறவுகோலாய் - ஒன்றைமட்டும்
இதயத்திற்கு இதமளிக்கும் அன்புதான்…
 
உங்கள் வாழ்வில்
கண்ணில் கண்ணீரும்
மனதில் சோகமும்
கொள்ளா(ல்லா)மல் இருக்க
கண்ணில் செந்நீரும்
மனதில் தா(க்)கமும்
கொண்டு இக்கவியின்
வரிகளை வ(மு)டிக்கின்றேன்.

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு எழுதுகின்ற நேரம்
எழுந்தது என்னுள் எத்தனையோ பெரும்மூச்சு…

(ஈகரை என்னும் தளத்தில் நடந்த கவிதைப்போட்டிக்காக எழுதியது)

4 comments:

எஸ்.கே said...

உணர்ச்சி காவியம்!

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு எழுதுகின்ற நேரம்
எழுந்தது என்னுள் எத்தனையோ பெரும்மூச்சு…

Anonymous said...

//உறவுகள் இல்லாமல் நாங்கள்
வாழும் இவ்வாழ்கை துறவுகோலம்தான்
நாங்கள் வேண்டுவது திறவுகோலாய் - ஒன்றைமட்டும்
இதயத்திற்கு இதமளிக்கும் அன்புதான்…//

துறவிற்கும் விடிவு வரும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

நலமா? இரண்டு நாட்களாக காணவில்லை...

மிக்க நன்றி நண்பா....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

தங்களின் வார்த்தைகளின் வழியில் அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்...

நம்மால் ஆன அளவிற்கு அவர்கள் மீது அன்பு செலுத்துவோம்...